மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப மோடியின் தலையீட்டை எதிர்பார்க்கும் அமீரகத்தின் முன்னாள் தூதர்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் தூதர் உசேன் ஹசன் மிர்சா கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு மற்றும் இரு நாட்டுத் தலைவர்களுடனான மோடியின் நெருங்கிய நட்பு, இந்தப் போரை நிறுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு தொலைபேசி அழைப்பு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரப் போதுமானது என்று மிர்சா குறிப்பிட்டுள்ளார். அமீரகத்தில் வசிக்கும் 35 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதியைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழலில் இந்தியாவின் பங்களிப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.