குரங்குகளின் நெற்றியில் பச்சை குத்தப்படும் திரிசூலம் பின்னணியில் இருக்கும் விசித்திர காரணம் என்ன

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வனத்துறை வினோதமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அங்கு பிடிக்கப்படும் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, அவற்றை அடையாளம் காணும் வகையில் நெற்றியில் ‘திரிசூல’ வடிவிலான பச்சை குத்தப்பட்டு வருகிறது. தொலைவில் இருந்து பார்த்தாலே எளிதாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த முறை கையாளப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு விலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத அடையாளங்களை விலங்குகள் மீது திணிப்பதும், பச்சை குத்துவதால் ஏற்படும் வலியும் தேவையற்றது என்று அவர்கள் வாதிடுகின்றனர். அதே சமயம், குரங்குகளைப் புனிதமாகக் கருதுவதால் இந்த அடையாளம் அவற்றைப் பாதுகாக்கும் என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.