விண்வெளியில் கண்டறியப்பட்ட பூமியின் இரட்டை கிரகம் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் என தகவல்

விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக பூமியிலிருந்து 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ‘எச்டி-137010 பி’ என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட சற்றே பெரியதாக உள்ள இந்த கிரகம் தனது நட்சத்திரத்தை சுற்றி வர 355 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த கிரகத்தின் சுற்றுப்பாதை மற்றும் நட்சத்திரத்திற்கும் அதற்குமான தூரத்தை வைத்து கணக்கிடும்போது அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் 51 சதவீதம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாசாவின் கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த கிரகம் செவ்வாய் கிரகத்தை விட குளிர்ச்சியாக இருந்தாலும் அங்கு திரவ வடிவில் நீர் இருக்க அதிக வாய்ப்புள்ளது. சூரியனை விட நீண்ட ஆயுள் கொண்ட ஒரு குள்ள நட்சத்திரத்தை இந்த கிரகம் சுற்றி வருவதால் எதிர்காலத்தில் இங்கு உயிரினங்கள் உருவாவது சாத்தியமே என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமியைப் போன்ற பாறை அமைப்பு மற்றும் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாதையை வகுத்துள்ளது.