பெங்காலியில் பேசியது குற்றமா? புனேவில் மேற்கு வங்கத் தொழிலாளர் அடித்துக் கொலை!

புனேவில் வேலைக்குச் சென்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குர்மி சமூக இளைஞர் சுகேன் மஹதோ, பெங்காலி மொழியில் பேசியதற்காகவே கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிழைப்பு தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் சாமானியத் தொழிலாளர்களின் பாதுகாப்பு இன்று மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
மொழி வெறுப்பினால் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் செயலால் ஆத்திரமடைந்துள்ள உயிரிழந்தவரின் குடும்பத்தினர், தங்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக பா.ஜ.க-வை நேரடியாகப் புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஜங்கிள்மஹால் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளது.
வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் இந்த மரணம் ஆழ்ந்த அச்சத்தை விதைத்துள்ளது. மொழி ரீதியான பாகுபாடும் வன்முறையும் சாதாரண மக்களின் வாழ்வைச் சிதைத்து வரும் நிலையில், “வெளிமாநிலங்களில் பாதுகாப்பாகப் பணியாற்றுவது இனி சாத்தியமில்லையா?” என்ற ஆவேசமான கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.