எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்: மெயில் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!

அமெரிக்காவின் பிரபல பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன், இந்திய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ஹர்தீப் சிங் பூரி மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நீதித் துறை (Department of Justice) வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
வெளியான ஆவணங்களின்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி, ஹர்தீப் சிங் பூரி, ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் லிங்க்ட்இன் (LinkedIn) இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகத் தெரிகிறது. தனது உதவியாளர் ஒருவருக்கு விசா பெற்றுத் தருவது தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் நார்வே நாட்டின் தூதரக அதிகாரி டெர்ஜே லார்சனைச் சந்திப்பதற்கான நேரம் குறித்தும் பூரி பலமுறை மின்னஞ்சல் வாயிலாக உரையாடியுள்ளதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன. சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய எப்ஸ்டீன் வழக்கில் ஒரு இந்திய அமைச்சரின் பெயர் அடிபடுவது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.