மனித கழிவில் மருந்தா? பண்டைய ரோமானிய மருத்துவ ரகசியம் அம்பலம்!

பண்டைய ரோமானியர்கள் காயங்களைக் குணப்படுத்தவும், உடல் தொற்றுகளைச் சரி செய்யவும் மனித கழிவுகளைப் பயன்படுத்தினார்களா? கேட்பதற்கே அருவருப்பாகவும் விசித்திரமாகவும் இருந்தாலும், துருக்கியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ள சில சான்றுகள் இந்த வியக்கத்தக்க உண்மையை உறுதிப்படுத்துகின்றன. பண்டைய ரோமானிய காலத்து கண்ணாடி குடுவைகளில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் கையாண்ட இந்த வினோத மருத்துவ முறையின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வரலாற்றுப் புகழ்பெற்ற மருத்துவர் கேலன் (Galen) எழுதிய குறிப்புகளில், மனித மலத்துடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் சில பாக்டீரியா எதிர்ப்பு மூலிகைகளைக் கலந்து ஒருவித மருந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் தீராத புண்களை ஆற்றும் ‘சக்திவாய்ந்த மருந்தாக’ கருதப்பட்டது.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நவீன மருத்துவ உலகமும் தற்போது இதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. பெருங்குடல் தொற்று போன்ற தீவிர பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, மலம் சார்ந்த மருத்துவ முறைகளுக்கு (Fecal Microbiota Transplant) அமெரிக்காவின் எஃப்டிஏ (FDA) ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இந்த நவீன கண்டுபிடிப்புகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் மருத்துவத்தில் எவ்வளவு துணிச்சலாகவும், பன்முகத்தன்மையுடனும் செயல்பட்டுள்ளனர் என்பதை உலகிற்குப் பறைசாற்றுகின்றன.