கோபால்கஞ்சில் திருப்பம்! ஷேக் ஹசீனாவின் கோட்டையில் களமிறங்கும் இந்து தலைவர்

வங்கதேச பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கோட்டையாக கருதப்படும் கோபால்கஞ்ச்-3 தொகுதி இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவாமி லீக் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில், இந்து மகாஜோட் தலைவரும் வழக்கறிஞருமான கோவிந்த சந்திர பிரமாணிக் இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களம் காண்கிறார்.
நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியில், கோவிந்த சந்திர பிரமாணிக்கின் இந்த முடிவு நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த முக்கிய தொகுதியில், பிஎன்பி (BNP), ஜமாத் மற்றும் பிற இஸ்லாமியக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக கோவிந்த சந்திரா போட்டியிடுகிறார். கட்சிப் பாகுபாடின்றி உள்ளூர் பிரச்சனைகளுக்காகவும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். கடும் மத ரீதியான துருவமுனைப்பு நிலவும் இந்தச் சூழலில், வாக்காளர்கள் ஒரு சுயேச்சை இந்துத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கே ஆதரவு அளிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.