9 கோடி கடன்: சிறையில் ராஜ்பால் யாதவ்! கைதூக்கி விட முன்வந்த சல்மான், அஜய் தேவ்கன்!

திரையுலகில் பலரையும் சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் ராஜ்பால் யாதவ், தற்போது 9 கோடி ரூபாய் கடன் விவகாரத்தில் சிக்கி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திரையில் அனைவரையும் மகிழ்வித்த ஒரு நடிகருக்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக பாலிவுட் திரையுலகம் திரண்டுள்ளது.
இது குறித்து ராஜ்பால் யாதவின் உதவியாளர் கோல்டி கூறுகையில், “இந்த இக்கட்டான சூழலில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், அஜய் தேவ்கன் மற்றும் சோனு சூட் ஆகியோர் ஏற்கனவே உதவிக்கரம் நீட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இது தவிர, இயக்குநர்கள் டேவிட் தவான் மற்றும் வருண் தவான் ஆகியோரும் தொடர்ந்து அவரோடு தொடர்பில் இருந்து வருகின்றனர்.
தற்போது சிறையில் இருக்கும் ராஜ்பால் யாதவ் மனதளவில் உறுதியாக இருப்பதாகவும், சக நடிகர்களின் இந்த பேராதரவு அவர் விரைவில் சட்ட சிக்கல்களில் இருந்து மீண்டு வர உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடன் சுமையைக் குறைத்து, விரைவில் அவர் சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் திரையில் தோன்றுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.