பிஎம்டபிள்யூ காரில் வந்து திருட்டு: சிக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் ‘மாஸ்க் மேன்’!

விசாகப்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஒரு உயர்தர திருடனின் வாழ்க்கை முறை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த மகேஷ் ரெட்டி (என்கிற சன்னி), 26 வீடுகளில் கொள்ளையடித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடம்பர வாழ்க்கை மற்றும் போதை பழக்கங்களுக்காக இவர் ‘மாஸ்க் தீப்’ (Mask Thief) ஆக அவதாரம் எடுத்துள்ளார்.
பொறியாளர் வேடத்தில் 26 திருட்டுகள்
முதுகலை பட்டதாரியான மகேஷ் ரெட்டி, நல்ல சம்பளத்தில் பணியில் இருந்தார். இருப்பினும், அவருக்கு பிராண்டட் பொருட்கள் மற்றும் காஸ்ட்லி பார்ட்டிகள் மீது அதீத மோகம் இருந்தது. இதற்காக ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு வந்து, ஆள் இல்லாத பூட்டிய வீடுகளைக் குறிவைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார். சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருக்க எப்போதும் முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து கொள்வார். கஜுவாகா பகுதியில் நடந்த ஒரு பெரிய திருட்டு வழக்கை விசாரித்த போலீசார், நவீன தொழில்நுட்ப உதவியுடன் இவரைப் பிடித்தனர்.
திருட்டுப் பணத்தில் பிஎம்டபிள்யூ கார்
விசாரணையின் போது, திருடிய பணத்தைக் கொண்டு பிஎம்டபிள்யூ (BMW) கார் வாங்கியதை மகேஷ் ஒப்புக்கொண்டார். அந்த காரிலேயே ஊர் சுற்றியதுடன், நண்பர்களுக்கு விலையுயர்ந்த பார்ட்டிகளையும் கொடுத்து வந்துள்ளார். அவரிடமிருந்து 699 கிராம் தங்கம், சுமார் 4 கிலோ வெள்ளி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிரில்லிங் மெஷின், கட்டர் உள்ளிட்ட கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது பிஎம்டபிள்யூ கார் மற்றும் ஒரு ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட கால குற்றப்பின்னணி
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மகேஷ் ரெட்டி சிறுவயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமார் 60 திருட்டு வழக்குகள் உள்ளன. ஏற்கனவே சிறைக்கும் சென்று வந்துள்ளார். தற்போது இவரிடம் மற்ற வழக்குகளில் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.