கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி, 25 பேர் காயம்; உலகமே அதிர்ச்சி!

கனடா: கல்விக்கூடங்கள் இனி பாதுகாப்பானவை தானா என்ற அச்சம் தற்போது உலகெங்கிலும் எழுந்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ‘டம்ப்ளர் ரிட்ஜ்’ (Tumbler Ridge) மேல்நிலைப் பள்ளியில் பெண் ஒருவர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சுமார் ஐந்து மணி நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களில் மாணவர்கள் உள்ளனரா என்பது குறித்த கவலை அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கான பின்னணி மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.