சீனா, பாகிஸ்தான் பீதி! 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா: உலகின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம்

இந்திய விமானப்படையின் பலத்தை பலமடங்கு அதிகரிக்கும் வகையில், பிரான்சிடம் இருந்து 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சுமார் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டெல்லி வருவதற்கு முன்னதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம்
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) முயற்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகும். ஒப்பந்தத்தின்படி, 100 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதன் மூலம் அதிநவீன போர் விமான தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு மாற்றப்படும். தற்போது இந்தியாவிடம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. புதிய 114 விமானங்கள் இணைந்தால், பிரான்ஸிற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய ரஃபேல் விமானப் படையைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.
எதிரிகளின் கோட்டையைத் தகர்க்கும் வல்லமை
இந்த விமானங்கள் அதிநவீன ‘SCALP’ க்ரூஸ் ஏவுகணைகளைக் கொண்டிருக்கும். இவை 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. ஏற்கனவே இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் ‘M’ ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வரவு இந்திய வான்வெளியைப் பாதுகாப்பான கோட்டையாக மாற்றும். இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.