ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கு சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

சர்ச்சைக்குரிய வகையில் ‘பாயிண்ட் பிளாங்க்’ வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் 12 பேர் இணைந்து தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ஹிமந்த விஸ்வ சர்மாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பதவியில் இருப்பவர்கள் பேசும் தூண்டுதல் உரைகள் சமூக நல்லிணக்கத்தைச் சிதைப்பதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையைப் பாதிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இத்தகைய பேச்சுகள் அமைந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.