வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை, தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சில அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்றும், வரும் 10-ஆம் தேதியும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு வராதவர்களுக்கு ‘வேலை இல்லை எனில் ஊதியம் இல்லை’ என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மேலும், அவர்கள் மீது விதி 17-பி-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ விடுப்பு தவிர தற்செயல் விடுப்பு உள்ளிட்ட வேறு எந்த விடுப்பும் வழங்கப்படாது என்றும், போலி மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். பொதுமக்களும் மாணவர்களும் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும், தினமும் காலை 10.15 மணிக்குள் ஊழியர்களின் வருகைப் பதிவை அரசுக்கு அனுப்பவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.