சாதாரண போனில் மகளின் சாதனையை படம் பிடித்த தந்தை இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் தனது மகளின் நடனத்தை ஒரு தந்தை சாதாரண பட்டன் போனில் பதிவு செய்யும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய நவீன ஸ்மார்ட்போன் உலகில், விலை உயர்ந்த கேமராக்கள் இல்லாவிட்டாலும், தனது மகளின் திறமையை சேமித்து வைக்க அந்த தந்தை காட்டிய ஆர்வம் பலரது கண்களை கசிய வைத்துள்ளது. இந்த வீடியோ அன்பிற்கும் பாசத்திற்கும் எந்த தொழில்நுட்பமும் தடையல்ல என்பதை உணர்த்துகிறது.
ஜிதேந்திர சரஸ்வத் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்த தந்தை வெயிலின் வெளிச்சம் திரையில் படாதவாறு கையை வைத்து மறைத்து மிகவும் கவனமாக வீடியோ எடுப்பதைக் காண முடிகிறது. இந்த காட்சியைப் பார்த்த இணையவாசிகள், “தந்தையின் பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை” என உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்பத்தை விட உணர்வுகளுக்கே அதிக மதிப்பு என்பதை இந்த தந்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.