ஈரானுக்கு பதில் வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறதா இந்தியா ட்ரம்பின் பேச்சால் மத்திய அரசை சாடும் காங்கிரஸ்

ஈரானுக்குப் பதிலாக வெனிசுலாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், இந்தியாவின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை முடிவுகளை இந்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே அமெரிக்க அதிபர் அறிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில், ஆபரேஷன் சிந்துர் நிறுத்தப்பட்டது மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான தகவல்களை முன்பே ட்ரம்ப் வெளியிட்டதை சுட்டிக்காட்டினார். இந்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை அமெரிக்க அதிபர் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளும் நிலை தொடர்வதாக அவர் விமர்சித்தார். அரசின் வெளிப்படைத்தன்மை குறித்தும் நாட்டின் முக்கிய முடிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.