அலார சத்தத்தினால் சட்டென்று தூக்கம் கலைகிறதா இதய பாதிப்பு ஏற்படும் அபாயம்

தினமும் காலையில் அலார சத்தத்தைக் கேட்டு திடீரென தூக்கத்திலிருந்து எழுவது உங்கள் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சுவீடனின் லண்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் தொழில்சார் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, அலார சத்தத்தால் திடீரென விழிப்பது உடலில் அட்ரினலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. இது இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து திடீரென எழுவது மூளையின் செயல்பாட்டுத் திறன், நினைவாற்றல் மற்றும் செரிமான மண்டலத்தைப் பாதிக்கிறது. இது காலப்போக்கில் மன அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, அலாரத்தின் உதவி இல்லாமல் குறைந்தது 8 மணிநேரம் உறங்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தவிர்க்க முடியாத சூழலில் அலாரம் பயன்படுத்தினால், அதிக சத்தத்திற்குப் பதிலாக மென்மையான இசையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.