ஜான்சி ஜிஎஸ்டி அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை ஒன்றரை கோடி ரூபாய் லஞ்சப் புகாரில் துணை ஆணையர் உட்பட 5 பேர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தில் நடந்த மாபெரும் ஊழல் மோசடியை சிபிஐ அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரில் இருந்து தப்பிக்க தனியார் நிறுவனத்திடம் 1.5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக துணை ஆணையர் பிரபா பண்டாரி, இரண்டு கண்காணிப்பாளர்கள், ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
இந்த சோதனையில் இதுவரை 1.6 கோடி ரூபாய் ரொக்கம், கட்டுக்கட்டாக தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது. கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.