80 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இஸ்ரேலின் மிக உயரிய விருது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புளோரிடாவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இஸ்ரேல் மற்றும் யூத மக்களுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ட்ரம்ப்பிற்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘இஸ்ரேல் பிரைஸ் ஃபார் பீஸ்’ வழங்கப்படும் என நெதன்யாகு அறிவித்தார். கடந்த 80 ஆண்டுகளில் இந்த விருது இஸ்ரேலியர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், அமைதிப் பிரிவில் இந்த விருது வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை.
இந்தச் சந்திப்பில் காசா அமைதித் திட்டம் மற்றும் ஹமாஸ் ஒழிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த கௌரவத்திற்காக ட்ரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்று விருதைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேற்குக்கரை விவகாரத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ட்ரம்ப் ஆதரித்துள்ளார். ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இந்த விருதை வழங்க ஏதுவாக இஸ்ரேல் தனது விதிகளில் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.