பள்ளி கழிவறையில் சக மாணவர்களால் கொடூர தாக்குதல் நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் அவனது சக மூன்று மாணவர்களால் பள்ளி கழிவறையில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த மாணவன் தொடர்ந்து கேலிக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டு வந்துள்ளார். வகுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட பொறாமையில் சக மாணவர்கள் அவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து வந்ததோடு தற்போது கொடூரமான தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரளித்த போதிலும் காவல்துறையினர் முதலில் வழக்கை பதிவு செய்ய தயங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் உறவினர்களின் அழுத்தத்தால் ஜெயலட்சுமிபுரம் போலீசார் சிறுவர் நீதியச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான்காம் வகுப்பு முதலே இந்த கொடுமை நடந்து வருவதாகவும் ஆசிரியர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மாணவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.