முஸ்லிம் இளைஞரை வரவேற்ற பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் எதிர்ப்புக்கு ஆளானது ஏன்

எகிப்து சிறையிலிருந்து விடுதலையான மனித உரிமை ஆர்வலர் அலா அப்துல் எல்-பத்தாவை வரவேற்றதற்காக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது சொந்த நாட்டிலேயே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். சுமார் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு பிரிட்டன் திரும்பிய அவரை பிரதமர் நேரில் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார். இருப்பினும், பத்தாவின் பழைய சமூக ஊடகப் பதிவுகளில் வன்முறை மற்றும் யூத எதிர்ப்பு கருத்துக்கள் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஸ்டார்மருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வெளியுறவுத் துறை, பத்தாவின் விடுதலையை ஆதரிப்பது அவரது கருத்துக்களை ஏற்பதாக அர்த்தமல்ல என்று கூறியுள்ளது. 2011 எகிப்து புரட்சியின் முக்கிய முகமான பத்தா, செப்டம்பர் 2025-ல் அதிபர் மன்னிப்பு பெற்ற பின்னரே லண்டன் திரும்பினார். தற்போது அவரது கடந்த கால செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி பிரதமர் ஸ்டார்மர் தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால் பிரிட்டன் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.