ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க உச்சநீதிமன்றம் அதிரடி தலையீடு திங்கட்கிழமை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை

ஆரவல்லி மலைத்தொடரின் பாதுகாப்பு மற்றும் அதன் வரையறை தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் திங்கட்கிழமை இது குறித்து விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஆரவல்லி பகுதியில் புதிய சுரங்க குத்தகைக்கு முழு தடை விதித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிக்க ஆரவல்லி மலைகளை காப்பது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கும் பணி முடியும் வரை புதிய சுரங்கப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கப் பணிகளைத் தடுப்பதோடு, பசுமை ஆரவல்லி திட்டத்தின் மூலம் இப்பகுதியை மேம்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.