வங்கியிலேயே கைவரிசை! வாடிக்கையாளர் பணத்தை ஜேப்பியில் போட்ட கேஷியர்: பகீர் சிசிடிவி காட்சி
December 18, 2025

ஹமீர்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஒன்றரை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வந்த வணிகருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நோட்டுகளை எண்ணிய கேஷியர் மோஹித் காரே, அதில் 10 நோட்டுகள் குறைவாக இருப்பதாகக் கூறி வாடிக்கையாளரை மிரட்டியுள்ளார். சந்தேகமடைந்த வாடிக்கையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கேஷியர் நைசாக பணத்தை எடுத்து தனது ஜேப்பியில் மறைத்து வைத்தது அம்பலமானது.
இந்த மோசடி சம்பவம் குறித்து வங்கி மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே பலமுறை இவர் மீது பணத்தைக் குறைத்துக் கூறிய புகார்கள் இருந்த நிலையில், தற்போது ஆதாரத்துடன் சிக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வங்கி பொது மேலாளர் ஸ்ரீராம் சம்பந்தப்பட்ட கேஷியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.