FSSAI-இன் அதிரடி நடவடிக்கை: முட்டை தரத்தை சோதிக்க நாடு தழுவிய மாதிரி சோதனை உத்தரவு, மறைந்திருக்கும் ஆபத்து என்ன?

முட்டையின் தரம் குறித்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் நைட்ரோஃபியூரான்ஸ் (Nitrofurans) என்ற தடை செய்யப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic) இருக்கக்கூடும் என்ற அச்சத்தின் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் அதன் மண்டல அலுவலகங்களுக்கு முட்டை மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பிராண்டட் மற்றும் பிராண்ட் இல்லாத முட்டைகளின் மாதிரிகள் நாட்டின் பத்து ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும்.
இந்த ரசாயனம் நச்சுத்தன்மை, புற்றுநோய் மற்றும் மரபணு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால், இதன் எச்சங்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. நீண்டகால வெளிப்பாடு கல்லீரல் பாதிப்பு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையில், ‘எகாகோஸ்’ (Eggoz) நிறுவனம் தங்கள் வலைத்தளத்தில் ஆய்வக அறிக்கையை வெளியிட்டு, தங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்றும் உறுதியளித்துள்ளது.