அலாஸ்கா-கனடா எல்லையில் பயங்கர 7.0 ரிக்டர் நிலநடுக்கம்! பேரழிவைத் தவிர்த்தது எப்படி?

அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் எல்லைப் பகுதியில் சனிக்கிழமை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, நிலநடுக்கத்தின் மையம் அலாஸ்காவின் ஜூனோ தலைநகரிலிருந்து சுமார் 370 கி.மீ வடமேற்கிலும், யூகோனின் ஒயிட்ஹார்ஸிலிருந்து 250 கி.மீ மேற்கிலும் அமைந்திருந்தது. மக்கள் தொகை மிகக் குறைவாக இருப்பதால், இந்த பெரிய அதிர்வு ஏற்பட்ட போதிலும், உயிரிழப்புகள் அல்லது கட்டமைப்பு சேதங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒயிட்ஹார்ஸில் அலமாரிகளில் இருந்து பொருட்கள் கீழே விழுந்ததாக பல தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகளும் உணரப்பட்டன. ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸாருக்கு அதிர்வு குறித்து பல அவசர அழைப்புகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேச்சுரல் ரிசோர்சஸ் கனடாவின் நில அதிர்வு ஆய்வாளர் அலிசன் பேர்ட், மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதி மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலைப் பிரதேசம் என்பதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.