பாக். எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவல்! மாட்டுத் தொழுவத்தில் பதுங்கியிருந்த இளைஞன் பிடிபட்டான்

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைக் கடந்து ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இளைஞர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைது செய்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் முள்வேலியைக் கடந்து இந்தியப் பகுதிக்குள் சுமார் 200 மீட்டர் தொலைவில் ஊடுருவிய 24 வயதான ஹிடால் என்ற அந்த நபர், காலையில் கிராமத்தில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் மறைந்திருந்தான் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அவனைக் கண்ட கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், பிஎஸ்எஃப் வீரர்கள் அவரை உடனடியாகக் கைது செய்தனர். அவரிடம் இருந்து சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், அவன் ஏன் எல்லை தாண்டி வந்தான், எதற்காக ஊடுருவ முயன்றான் என்பதைக் கண்டறிய பாதுகாப்பு ஏஜென்சிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. மேலதிக விசாரணைக்காக அந்த நபர் செட்வா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.