1962 சீனா போர் காலத்தில் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய பழைய பாலம் இப்போது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நவீன உணவகமாக மாற்றம்

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் 1962 இந்திய-சீனப் போரின் நினைவாக இருந்த பழைய பெய்லி பாலம் தற்போது ‘பார்டர் ப்ரூ கஃபே’ எனும் நவீன உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம், ஒரு காலத்தில் ராணுவ வீரர்களின் நடமாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. ராணுவத்தின் கஜராஜ் கோர் அமைப்பால் 31 நாட்களில் இது சுற்றுலாப் பயணிகளுக்கான அழகிய இடமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் மோன்பா பழங்குடியின பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்த உணவகத்தில் போர் வீரர்களின் தியாகத்தைப் போற்றும் ‘வீரச் சுவர்’ மற்றும் சிறிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1959-ல் தலாய் லாமா இந்தியாவிற்குள் நுழைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெமிதாங் பகுதியில் அமைந்துள்ள இந்த முயற்சி, எல்லைப்புற சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.