மெட்டாவில் தொடரும் பணிநீக்கம் 700 ஊழியர்கள் மீண்டும் வெளியேற்றம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மெட்டா நிறுவனம் மீண்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக விற்பனை, மனிதவளம் மற்றும் வன்பொருள் பிரிவுகளில் பணியாற்றும் சுமார் 700 ஊழியர்கள் இந்த முறை பாதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்ட நிலையில், மெட்டாவின் இந்த அடுத்தக்கட்ட நடவடிக்கை ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்திற்காக இந்த ஆண்டு சுமார் 135 பில்லியன் டாலர் வரை மெட்டா முதலீடு செய்துள்ளது. 2028-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 600 பில்லியன் டாலர் செலவிடப்படும் என்று தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து நிறுவனம் பரிசீலித்து வந்தாலும், தொழில்நுட்ப மாற்றங்கள் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.