45 வயதில் ரூ.4.7 கோடியுடன் ஓய்வுபெறும் நபர் – அவரது உறவினர் பகிர்ந்த சீக்ரெட்!

45 வயதில் ரூ.4.7 கோடியுடன் ஓய்வுபெறும் நபர் – அவரது உறவினர் பகிர்ந்த சீக்ரெட்!

சாதாரண வேலை பார்த்த ஒருவர் தனது 45 வயதில் ரூ.4.7 கோடி பணத்துடன் ஓய்வு பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு பெரிய சம்பளத்தில் வேலை பார்க்கவில்லை. சொந்த தொழில்மூலம் பெரும் வருமானம் ஈட்டவில்லை, ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் பார்க்கவில்லை, லாட்டரியில் பரிசு விழுந்ததா என்றால் அதுவும் இல்லை. இருந்தாலும் ஒரு சாதாரண வேலை பார்த்தவர் எப்படி 45-வது வயதில் ரூ.4.7 கோடி பணத்துடன் ஓய்வுபெற முடியும்? இந்த உண்மை சம்பவம் தற்போது இணையத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த கதையை அவரது அண்ணன் மகன் ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்காக அவர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார். அப்போதுதான் இந்த முதலீட்டு வகை இந்தியாவில் அறிமுகமாகிக் கொண்டிருந்த காலம். பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சந்தேகம் இருந்தது. இது உண்மையா? நமது பணம் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அவர் தயங்காமல் முதலீடு செய்திருக்கிறார். ஆரம்பத்தில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தார். இது அந்த நேரத்தில் மிகப்பெரிய தொகை.

பின்னர் அவர் ரூ.500 முதலீட்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் திட்டத்தில் முதலீடு செய்தார். சம்பளம் உயர்ந்தபோது தனது முதலீட்டுத் தொகையையும் உயர்த்தினார். கடந்த 2010 ஆம் ஆண்டுக்குள் அவர் மாதம் ரூ.20,000 முதலீடு செய்யத் துவங்கினார். இந்தக் காலக்கட்டங்களில் அவர் ஒரு முறை கூட முதலீடு செய்யத் தவறவில்லை.

ஆச்சரியப்பட வைக்கும் நிதி மேலாண்மை

அவர் தனது ஒவ்வொரு பணத்தையும் திட்டமிட்டு செலவு செய்திருக்கிறார். இது குறித்து அவரது அக்கா மகன் ஆச்சரியப்பட்டு கேட்டபோது, அவர் தனது பேங்க் பாஸ்புக் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் ஸ்டேட்மென்ட்டை காட்டியுள்ளார். அதில் மொத்தமாக ரூ.4.7 கோடி பணம் இருந்திருக்கிறது.

அவரிடம் பிரம்மாண்டமான பங்களா இல்லை, நவீன வசதிகளுடன் கூடிய கார் கூட இல்லை. முப்பது வருடங்களாக ஒரு சாதாரண 2BHK வீட்டில்தான் வசிக்கிறார். வாழ்க்கை முழுவதும் ஸ்கூட்டர்தான் வாகனமாக இருந்திருக்கிறது. ஓய்வுக்குப்பின் தான் இவர் தனது மனைவியுடன் வாரந்தோறும் சுற்றுலா செல்ல தொடங்கியிருக்கிறார். அதற்கு முன் வரை அவர் வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் சுற்றுலா சென்றிருக்கிறார்.

இணையத்தில் வியப்பும் விவாதமும்!

இந்த பதிவுக்கு 9,000-க்கும் மேற்பட்ட upvotes கிடைத்துள்ளது. “இது உண்மையான நிதி சுதந்திரம், அனைவரும் இவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால் ஒரு சிலர் “வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இளம் வயதில் எல்லாவற்றையும் இழந்த அவர், இப்போதுதான் வாழத் துவங்கியிருக்கிறார்” எனக் கூறியிருக்கின்றனர். குறிப்பாக ஒருவர், “பணத்தை சேமிக்கிற விஷயத்தில் இவர் முன் மாதிரி. ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது” என்றார். “அவர் தனது வாழ்க்கையை அப்படி திட்டமிட்டிருக்கிறார். நாம் மற்றவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *