லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் பயன்பாடு

லெபனான் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய ராணுவம் ஆபத்தான வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி யோஹ்மர் நகரில் இந்த கொடூரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட இந்த நடவடிக்கையினால் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்து பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது தானாகவே தீப்பற்றும் இந்த வேதிப்பொருள், மனித உடலில் கடுமையான தீக்காயங்களையும் உறுப்பு செயலிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் இத்தகைய நச்சுத்தன்மை கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானது என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.