மும்பை இசைச் சாலை எழுப்பும் ஏஆர் ரகுமானின் ஜெயஹோ இசையால் மக்கள் கடும் அவதி

மும்பையின் ப்ரீச் கேண்டி பகுதியில் இந்தியாவின் முதல் ‘மியூசிக்கல்’ சாலை கடந்த பிப்ரவரி 11 அன்று திறக்கப்பட்டது. இந்தச் சாலையில் வாகனங்கள் செல்லும்போது எழும் ஏஆர் ரகுமானின் ‘ஜெயஹோ’ இசை, தற்போது அப்பகுதியில் வசிக்கும் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பெரும் தொல்லையாக மாறியுள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இடைவிடாது ஒலிக்கும் இந்த இசையால் நிம்மதி இழந்துள்ளதாக மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்தச் சத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஒலியின் அளவை ஆய்வு செய்ய பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) உத்தரவிட்டுள்ளது. திட்டத்தின் நோக்கம் சிதையாமல், குடியிருப்புப் பகுதிகளில் சத்தத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.