பல்லாவரத்தில் சேர்ந்து வாழ மறுத்த மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய கணவன் கைது
March 18, 2026

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சனா பாத்திமாவுக்கும் அனகாபுத்தூர் முகமது அலிக்கும் இடையிலான குடும்பத் தகராறில் கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தன்னை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்திய கணவனை சனா பாத்திமா நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று மனைவி மீது ஆசிட் வீசினார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் சனா பாத்திமாவின் கண்கள் பலத்த காயமடைந்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்லாவரம் போலீசார் முகமது அலியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.