நிலநடுக்கத்தில் கைக்குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்; வைரல் வீடியோவில் தெரிந்த மனிதாபிமானம்!

அசாமின் நகோன் மாவட்டத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின்போது, இரண்டு செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றினர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது மற்றவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஓடினாலும், ஆதித்யா நர்சிங் ஹோமில் உள்ள இந்த இரண்டு செவிலியர்களும் தங்கள் கடமையை விட்டு விலகவில்லை. சிசிடிவி காட்சிகளில், அவர்கள் தீவிரமாக குழந்தைகளை பாதுகாத்த காட்சிகள் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் செவிலியர்களின் தன்னலமற்ற, துணிச்சலான செயலுக்கு மக்கள் சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகமும் அவர்களை கௌரவித்து பரிசுகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நெகிழ்வான சம்பவம், மனிதர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் தங்களின் மனிதாபிமானத்தை இழப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.