ட்ரம்ப் கொள்கைக்கு பலத்த அடி: உள்நாட்டு வணிகர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை திருப்பி அளிக்கிறது அமெரிக்கா!

இறக்குமதி வரி கொள்கை மூலம் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த நினைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்த நாட்டிலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சுமார் 165-175 பில்லியன் டாலர் வரிப்பணத்தை உள்நாட்டு இறக்குமதியாளர்களுக்கு நிர்வாகம் இன்று முதல் திருப்பி அளிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக ‘CAPE’ என்ற புதிய ஆன்லைன் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப் போராட்டத்தில் ட்ரம்ப்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு ட்ரம்ப் அதிக வரி விதித்தார். ஆனால், இந்த சுமை அமெரிக்க வணிகர்களையே பாதித்து அவர்களை திவாலாகும் நிலைக்குத் தள்ளியது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வரி விதிக்கப்பட்டதாகக் கூறி, அந்தப் பணத்தை வணிகர்களுக்கே திருப்பித் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அமெரிக்க இறக்குமதியாளர்களின் வாங்கும் திறன் அதிகரித்து, இந்தியப் பொருட்களுக்கான தேவை அங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சுருக்கமாக
- உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 175 பில்லியன் டாலர் வரை வரி ரீஃபண்ட் இன்று தொடங்குகிறது.
- வரி விதிப்பில் IEEPA சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதால் ட்ரம்ப்பின் கொள்கை ரத்து.
- அமெரிக்க வணிகர்களின் செலவு குறைவதால் இந்திய ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு.
- ட்ரம்ப்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ திட்டம் கடும் சட்டச் சவால்களைச் சந்தித்துள்ளது.