அசாமில் மீண்டும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆட்சியை பிடிப்பாரா அல்லது கௌரவ் கோகோய் முந்துவாரா

அசாம் மாநிலத்தின் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் தரப்பில் முதன்முறையாக கௌரவ் கோகோய் களம் இறங்கியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் மறைந்த பாடகர் ஜுபின் கார்க்கின் மரணம் மற்றும் பாஜகவின் ‘ஜதி மதி பேட்டி’ முழக்கம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பூர்வீக மக்களின் நில உரிமை மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பை முன்வைத்து பாஜக வாக்கு சேகரித்து வருகிறது. அதேநேரத்தில் மாற்றத்தை விரும்புவதாகக் கூறும் கௌரவ் கோகோய், பாஜகவுக்கு கடும் சவால் அளித்து வருகிறார். ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், இழந்த அதிகாரத்தை மீட்க காங்கிரஸும் மல்லுக்கட்டுகின்றன.