உலகக் கோப்பையில் பாகிஸ்தானை நசுக்கிய கிராந்தி கௌர்! 6 மாதங்களில் மாறிய அதிர்ஷ்டம்: யார் இவர்?

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவுக்குப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தவர் வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌர். பாகிஸ்தானின் டாப்-ஆர்டரைச் சிதைத்த அவரது சிறப்பான பந்துவீச்சுக்காக மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது கிராந்திக்கு ‘ஆட்ட நாயகி’ விருது வழங்கப்பட்டது. நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு, டென்னிஸ் பந்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் மேற்கொண்ட பயணம், வெறும் ஆறு மாதங்களில் அவரது விதியை மாற்றியமைத்திருக்கிறது.
இந்தியாவின் 247 ரன்கள் இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி 159 ரன்களுக்குச் சுருண்டது. வலது கை வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌர் தனது 10 ஓவர் ஸ்பெல்லில் வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக தீப்தி ஷர்மாவும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் காட்டிய சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெண்கள் பிரீமியர் லீக்கில் (WPL) இடம் கிடைத்ததோடு, அதன் மூலம் தேசிய அணியிலும் வாய்ப்பைப் பெற்றார். உலகக் கோப்பையில் பெற்ற இந்த வெற்றியால் தனது கிராம மக்கள் பெருமைகொள்வார்கள் என்று கிராந்தி கௌர் தெரிவித்தார்.