இந்தியாவிலிருந்து டீசல் இறக்குமதியை திடீரென நிறுத்துகிறது உக்ரைன்!

அக்டோபர் 1 முதல் இந்தியாவிலிருந்து டீசல் இறக்குமதியை நிறுத்துவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வரும் டீசலில் ரஷ்ய எரிபொருள் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக உக்ரைனிய எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர் தெரிவித்துள்ளது. எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்கோர் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, இந்தியாவிலிருந்து வரும் டீசல் சரக்குகளில் ரஷ்ய மூலக்கூறுகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, உக்ரைனிய பாதுகாப்பு அமைப்புகள் தீவிர சோதனைக்கு உத்தரவிட்டுள்ளன. போரின் காரணமாக சொந்த சுத்திகரிப்பு ஆலைகள் சேதமடைந்ததால், உக்ரைன் இந்தியாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்து வந்தது. அண்மைக் காலத்தில் உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் கிட்டத்தட்ட 18% இந்தியாவிடமிருந்தே வந்தது குறிப்பிடத்தக்கது.