ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் தீப்பற்றி எரிப்பு மற்றும் துபை விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் பரபரப்பு

ஹோர்முஸ் நீரிணையில் தாய்லாந்து சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 20 பேரை ஓமன் கடற்படை மீட்டுள்ள நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க ராணுவம் தனது ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மூலம் ஈரான் கடற்படையின் 16 கப்பல்களை அழித்துள்ளதாக அதிரடி காட்சிகளை வெளியிட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், துபை சர்வதேச விமான நிலையத்தின் அருகே அடுத்தடுத்து விழுந்த இரண்டு ட்ரோன்களால் இந்தியர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். ஈரான் தனது அண்டை நாடுகள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் பல ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து அழித்துள்ளன. குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.