ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம்: அமெரிக்கக் கப்பல்களுக்கு வாஷிங்டன் கடும் எச்சரிக்கை!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் மோதலால், உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இப்பகுதியைக் கடந்து செல்லும் அனைத்து அமெரிக்கக் கப்பல்களும் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு வாஷிங்டன் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க கடல்சார் நிர்வாகம் (MARAD) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், அமெரிக்கக் கப்பல்கள் எக்காரணம் கொண்டும் ஈரானிய கடல் எல்லைக்குள் நுழையக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரானியப் படைகளைத் தங்கள் கப்பல்களில் ஏற அனுமதிக்க வேண்டாம் என்று மாலுமிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை நிலைமை மோசமானால், மோதல்களைத் தவிர்த்து ஓமன் நாட்டு கடல் எல்லை வழியாகப் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஓமனில் இரு நாடுகளுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், அணுசக்தி விவகாரத்தில் ஈரான் பிடிவாதமாக இருப்பதால் சுமுக முடிவு எட்டப்படவில்லை. ஈரானின் ராணுவப் பயிற்சிகள் மற்றும் அமெரிக்கப் படைகளின் குவிப்பு காரணமாகப் பாரசீக வளைகுடா பகுதியில் தற்போது கடும் பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே அமெரிக்க நிர்வாகம் இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.