விவாகரத்தில் ‘அபூர்வமான’ முன்மாதிரி மனைவி செய்த காரியம்! உச்ச நீதிமன்றம் பாராட்டு

பரஸ்பர சம்மதத்துடன் ஒரு திருமண உறவு முடிவுக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அந்தப் பெண்ணைப் பாராட்டியுள்ளது. இது ஒரு ‘அபூர்வமான சமரசம்’ என்று நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது. விவாகரத்து விசாரணையின் போது, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான பெண், கணவருடன் விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்தார். மேலும், அவர் எந்தவித ஜீவனாம்சமும் அல்லது நிதி இழப்பீடும் கேட்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வளவுடன் நிற்காமல், அந்தப் பெண் தன் மாமியார் பரிசளித்த தங்க வளையல்களையும் திருப்பி அளித்தார். மனைவியின் இந்த செயலைப் பாராட்டிய உச்ச நீதிமன்றம், “இத்தகைய உன்னதமான செயல் இன்று அரிதாகவே காணப்படுகிறது” என்று குறிப்பிட்டது. இதையடுத்து நீதிமன்றம் இறுதி உத்தரவைப் பிறப்பித்ததுடன், அனைத்து பழைய வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தது. மேலும், நீதிமன்றம் அந்தப் பெண்ணிடம், ‘கடந்த காலத்தை மறந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுங்கள்’ என்று கூறியது.