விடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை கட்டாயம்! புனே பழங்குடியின மாணவியரின் அதிர்ச்சி புகார்

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள அரசு பழங்குடியினர் விடுதி மாணவிகள், நிர்வாகத்தின் மீது அதிர்ச்சியூட்டும் புகார் தெரிவித்துள்ளனர். விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பும் அனைத்து மாணவிகளும் கட்டாயமாக கர்ப்பப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதில் ‘நெகட்டிவ்’ அறிக்கை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை மாநில மகளிர் ஆணையம் தீவிரமாக எடுத்துள்ளதுடன், இது தவறான செயல் எனக் குறிப்பிட்டு, விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும் என உறுதியளித்துள்ளது.
மாணவிகளை இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்துவது தவறு என்று மகளிர் ஆணையம் கருதுகிறது. புகாரில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் மாதத்தில் புனேவின் வாகட் பகுதியில் வழக்கமான சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் பழங்குடியின மாணவிகளுக்கு யுபிடி (UPT) பரிசோதனை செய்யப்பட்டது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.