வாக்குச் சாவடி வெப் காஸ்டிங் டெண்டர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்வதற்கான டெண்டர் நிபந்தனைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நூறு கோடி ரூபாய் வருடாந்திர வர்த்தகம் போன்ற கடுமையான நிபந்தனைகளால் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி நெட் செக்யூர் லேப்ஸ் நிறுவனம் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
மனுதாரர் தரப்பில் தாங்கள் ஏற்கனவே பல மாநிலத் தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளதாகவும், தற்போதைய நிபந்தனைகள் தங்களைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. தேர்தல் ஆணையம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கேமராக்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், டெண்டர் நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த விளக்கத்தைக் கோரியுள்ள தலைமை நீதிபதி அமர்வு விசாரணையை ஒத்திவைத்தது.