ரூ. 1,000-க்காக மனைவியை நண்பர்களிடம் விற்ற கணவன்: உ பி-யில் அரங்கேறிய கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலம் புடான் (Budaun) மாவட்டத்தில் மனிதநேயமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவியை வெறும் ஆயிரம் ரூபாய்க்காக சொந்த கணவனே தனது இரு நண்பர்களிடம் விற்றதோடு, அவர்கள் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
சம்பவம் என்ன?
பைஜ்கஞ்ச் பெஹ்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 30 வயது பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் சுட்கன் (Chutkan), பணத்திற்காக தன்னை பால்கிஷன் மற்றும் பாப்பு ஆகிய இரு நண்பர்களுடன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தோப்பில் நடந்த கொடூரம்
புகாரின்படி, அந்த இரு நபர்களும் அந்தப் பெண்ணை ‘சபேதே கா பாக்’ எனப்படும் ஆள் நடமாட்டமற்ற யூக்கலிப்டஸ் தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணை இருவரும் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண், தனது குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
புகார் கிடைத்தவுடன் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக புடான் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கணவர் மற்றும் அவரது இரு நண்பர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது மற்றும் விசாரணை
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பால்கிஷன் மற்றும் பாப்பு ஆகிய இருவரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு முக்கியக் காரணமான கணவர் சுட்கன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஹிருதயேஷ் கத்தேரியா தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் காவல்துறை உறுதி அளித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.