பார்கின்சன் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கிறது! சீனர்களின் பிரத்யேக ஸ்டெம்-செல் சிகிச்சை

சீனாவில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள், பார்கின்சன் நோயாளிகளுக்கு ஒரு புதிய ஸ்டெம்-செல் சிகிச்சையை வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இதுவரை குணப்படுத்த முடியாததாகக் கருதப்படும் இந்த நோய்க்கு, இது ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்பப்படுகிறது. டோபமைன் உற்பத்தி செய்யும் நியூரான்கள் அழிவதால் ஏற்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆறு நோயாளிகளுக்கு இந்த ஸ்டெம்-செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையில், சிகிச்சை பெற்ற மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் ஆறு நோயாளிகளின் பார்கின்சன் அறிகுறிகள் கணிசமாக மேம்பட்டன, மேலும் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்த சிகிச்சை டோபமைன் நியூரான்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் வகையில் ஸ்டெம் செல்களை உருவாக்குகிறது. இந்த செல்கள் பார்கின்சன் நோயாளிகளின் மூளையில் செலுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை அறிகுறிகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், நோயின் மூல காரணத்தையும் சரிசெய்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பார்கின்சன் நோயால் கை நடுக்கம், நடப்பதில் சிரமம் மற்றும் உடல் சமநிலையின்மை போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த சிறிய அளவிலான சோதனை வெற்றியடைந்தாலும், அதன் நீண்டகால விளைவுகள் மற்றும் பக்க விளைவுகளை அறிய, பரந்த அளவில் சோதனை செய்வது அவசியமாகும்.