பாகிஸ்தான் ராணுவத்தில் 4000 வீரர்கள் பலி ஆப்கான் எல்லையில் நிலைமை எல்லை மீறியது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஸ்ஹாக் டார் கவலை தெரிவித்துள்ளார். இந்த உயிரிழப்புகளை ‘சகித்துக்கொள்ள முடியாதது’ என்று அவர் வர்ணித்தார். மேலும், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அண்டை நாட்டின் மண்ணை பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று இஸ்லாமாபாத் காபூலைக் வலியுறுத்தி வருகிறது.
இஸ்ஹாக் டார் மேலும் கூறுகையில், TTP பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கான் எல்லையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலிபான் அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிரான குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், நூற்றுக்கணக்கான TTP போராளிகளை கைது செய்ய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், கடந்த மாதம் கத்தாரின் மத்தியஸ்தத்தால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தியதாகவும், ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் டார் தெரிவித்தார். அமைதியை விரும்புவதாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக தங்கள் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தலிபானை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.