பணத்தாசைக்கு நரபலி: வாலிபரின் தலையைத் துண்டித்த 4 பேர் கைது

டெல்லி அருகே காஜியாபாத்தில், நரபலி தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் ஈட்டுவதற்காக, 29 வயது இளைஞரை நரபலி கொடுத்து, தலையைத் துண்டித்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மந்திர தந்திரங்களை நம்பும் அவர்கள், 50 கோடி ரூபாய் வரை செல்வம் ஈட்டுவதற்காக இந்த கொடூரக் குற்றத்தைச் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருள் கொடுத்து மயக்கி, பின்னர் அவரை கொடூரமாக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரதான குற்றவாளியான விகாஸ் பரமாத்மா, அவரது மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையைச் செய்துள்ளார். அவர்கள், தாந்த்ரீக சடங்குகளுக்காக உடலிலிருந்து தலையைப் பிரித்து எடுத்துள்ளனர். பின்னர் பயந்துபோய், டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாக்கடையில் தலையை மறைத்து வைத்துள்ளனர். அதனை போலீசார் மீட்டனர். கொலை மற்றும் ஆதாரங்களை அழித்த குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.