சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நயினார் நாகேந்திரன் அதிரடி கருத்து

தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தாம் ஒரு கேஸ் டீலர் என்று குறிப்பிட்ட அவர், எங்கு சிலிண்டர் தேவையோ அங்கு தாம் வழங்கத் தயார் என்று சவால் விடுத்துள்ளார். ஹோட்டல்களில் உணவு தட்டுப்பாட்டிற்கும் சிலிண்டர் விநியோகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
திருச்சியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள் வெறும் தேர்தல் காலத்து அரசியல் உத்தி என்று விமர்சித்த அவர், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்றார். மத்திய புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.