சிராஜ், பும்ரா இல்லாத நிலையில் ஷமியை மிஸ் செய்கிறது இந்தியா கைப் பகீர் தகவல்

இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் கேள்வி எழுப்பியுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் ஆலோசனை வழங்க ஒரு மூத்த பந்து வீச்சாளர் இல்லாத குறையை அணி உணர்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், மார்கோ ஜேன்சன் மற்றும் மேத்யூ பிரிட்டஸ்கே-வின் போராட்டத்திற்கு முன் தடுமாறினர்.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஷமியின் இருப்பு இந்தத் தொடருக்கு மிகவும் அவசியமானது என்று கைப் வலியுறுத்தினார். ரஞ்சி டிராபியில் 145.2 ஓவர்கள் வீசி 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமி, எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். ஷமி அணியில் இருந்திருந்தால், பிரசித், அர்ஷ்தீப், ஹர்ஷித் போன்ற இளம் வீரர்களுக்கு அழுத்தமான தருணங்களில் அனுபவம் கைகொடுத்திருக்கும் என்றும் கைப் கருதுகிறார்.