கொரோனா கட்டுப்பாடு.. மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், சில முக்கிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ஒரு வாரம் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் இருப்பு, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் அரசு வலியுறுத்தியுள்ளது.