குஜராத்தில் 2.57 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு

குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசு அறிக்கையில் மாநிலக் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 269 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தெரிவித்துள்ளது. இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 635 குழந்தைகள் எடை குறைவுப் பிரச்சினையிலும், 45 ஆயிரத்து 634 குழந்தைகள் மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிலும் உள்ளனர். குறிப்பாகப் பழங்குடியினப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில் பஞ்சமஹால் முதலிடத்தில் உள்ளது, அதனைத் தொடர்ந்து பனாஸ்காந்தா மற்றும் கேடா மாவட்டங்கள் உள்ளன. இந்தச் சூழலில் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அரசு தரப்பில் இதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.