கிரீஸில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

இன்று காலை இந்திய நேரப்படி சரியாக 8:49 மணியளவில், கிரீஸ் நாடு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உலுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், கிரேட் கடற்கரைக்கு அப்பால் சுமார் 77 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கிரீஸ் நாட்டுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மே 13 ஆம் தேதியும் இதே போன்றதொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் கிரீஸைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.
அதிகாரிகள் சேத மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை பெரிய அளவிலான உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.